அருப்புக்கோட்டையில் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
By DIN | Published On : 24th June 2019 07:19 AM | Last Updated : 24th June 2019 07:19 AM | அ+அ அ- |

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை நாகலிங்காநகரில் சேதமடைந்த சாலையைச் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அருப்புக்கோட்டை நகரின் 28 ஆவது வார்டைச் சேர்ந்த நாகலிங்காநகரில் சுமார் 3,000 பேர் வசிக்கின்றனர். இங்குள்ள 2 வது பிரதானச் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இந்நிலையில் அச்சாலை தற்போது குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் இருப்பதால் மிதிவண்டிகளில் செல்லும் பள்ளி மாணவர்கள் தடுமாறி விழுந்து காயம் அடைகின்றனர். மேலும் மழைக்காலங்களில் சாலையில் நீர் தேங்கினால் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது.
எனவே நாகலிங்காநகர் 2 ஆவது பிரதானச் சாலையை விரைவில் சீரமைக்கப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.