சாத்தூர் முக்குராந்தலில் பொதுக்கழிப்பறை அமைக்கக் கோரி நகராட்சி நிர்வாகம் மீது வழக்கு தொடர்வது என தமாகா செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தமாகா சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு விருதுநகர் தெற்கு மாவட்டத் தலைவர் அரசன் ஜி.வி.கார்த்திக் தலைமை வகித்தார். சாத்தூர் நகரத் தலைவர் டி.எஸ்.ஐயப்பன், மாவட்ட துணைத்தலைவர் எல்.பி.எல்.கே.பாண்டியன், நகர துணைத்தலைவர் ஜோதிநிவாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் ஜூலை 15 ஆம் தேதி காமராஜரின் 117-ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் நிறைவேற்றபட்ட தீர்மானங்கள்: சாத்தூர் முக்குராந்தலில் உள்ள கட்டண கழிப்பறை கடந்த 2 ஆண்டு காலமாக பூட்டப்பட்டு செயல்படாமல் இருப்பதைக் கண்டித்து நகராட்சி அலுவலகத்தில் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் நகராட்சி நிர்வாகத்தின் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன. மேலும் இந்த கூட்டத்திற்கு பின்னர் சாத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மனிடம் இப் பிரச்னைகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமாகா நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்.