விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியில் குடிநீர் திட்ட பணிகளை ஆய்வு மேற்கொண்ட கண்காணிப்பு அலுவலர், மாவட்ட ஆட்சியரை உவர்குளம் கிராம மக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனர்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி, திருச்சுழி பகுதிகளில், தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்டுள்ள சிறப்பு கண்காணிப்பு அலுவலர் ச. கிருஷ்ணன் குடிநீர் பிரச்னை தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். அவர் வேலாயுதபுரம், கீழ உப்பிலிகுண்டு, முடுக்கன் குளம், தேனூர், உவர்குளம், திருச்சுழி முத்துராமலிங்காபுரம், கல்லூரணி, ஆத்திபட்டி முதலான பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் அ. சிவஞானம் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
காரியாபட்டி அருகே உவர்குளம் கிராம மக்கள், தங்கள் கிராமத்தில் குடிநீர் இல்லாமல் அவதிப்பட்டு வருவதாகக் கூறி கண்காணிப்பு அலுவலர், ஆட்சியரை முற்றுகையிட்டனர்.
இதையடுத்து, குடிநீர் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுப்பதாகவும், ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பதாகவும் அவர்கள் உறுதியளித்தனர்.
இதை தொடர்ந்து தேனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளிடம் கல்வி கற்பது குறித்து வினாக்கள் எழுப்பி, ஆய்வு மேற்கொண்டார். பின்னர், கீழ உப்பிலிகுண்டு கிராமத்தில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
இப்பகுதிகளில் பொது மக்கள் பெரும்பாலும் குடிநீர் பிரச்னையை பிரதான கோரிக்கையாக வலியுறுத்தினர்.