வாக்களிப்பது ஜனநாயகக் கடமை என கல்லூரி மாணவிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.
விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் சனிக்கிழமை சிவகாசி எஸ்.எப்.ஆர்.மகளிர் கல்லூரியில் தேர்தல் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் த.பழனீஸ்வரி தலைமை வகித்தார். இதில் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் பேசியதாவது:
தேர்தல் நாள் அன்று தவறாமல், வாக்கு சாவடிக்கு சென்று வாக்களிக்க வேண்டும். பலர் வாக்குச்சாவடியில் வரிசையில் நிற்க வேண்டும் என வாக்களிக்காமல் இருந்துவிடலாம். வாக்களிக்க வேண்டியது ஜனநாயகக் கடமையாகும். நீங்கள் வாக்களித்ததை , ஒப்புகை சீட்டு எனக்கூறப்படும், டிஸ்பிளே மூலம் 7 நொடிகள் பார்க்கலாம். வாக்காளர்கள் புகார் தெரிவிக்க வேண்டும் என்றால் 04562-1950 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
வாக்களிக்கத் தகுதி உள்ள அனைவரும் அன்று வாக்களித்து, ஜனநாயகத்தை நிலை நாட்டவேண்டும் என்றார். பின்னர் மாணவிகளின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். இதில் சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் தினகரன், வட்டாட்சியர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உடற்கல்வி இயக்குனர் விஜயகுமாரி நன்றி கூறினார். கல்லூரி வளாகத்தில் இரு மாதிரி வாக்குசாடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அதில் வாக்களிப்பது எப்படி என விளக்கிகூறப்பட்டது.