விருதுநகரில் உள்ள அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் சுற்றுச்சுவர் கட்டித் தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அரசு தொழில் பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இதில், 500 -க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பல்வேறு பாடப் பிரிவுகளில் படித்து வருகின்றனர். மேலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் மாணவர்கள், இந்த தொழிற் பயிற்சி நிலையத்தில் உள்ள விடுதியில் தங்கிப் படிக்கின்றனர்.
சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் உள்ள இம் மையத்தில் மாணவர்களுக்கான கழிப்பறை வசதி, குடிநீர் வசதி இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால், குடிநீருக்காக அருகில் உள்ள சூலக்கரை என்ற பகுதிக்கு மாணவர்கள் சென்று வரும் அவல நிலை உள்ளது. மேலும், இந்த வளாகத்தை சுற்றி குடியிருப்புகள் மற்றும் தொழிற்பேட்டை அமைந்துள்ளன. இந்நிலையில், இம் மையத்தில் சற்றுச்சுவர் இல்லாததால், இரவு நேரத்தில் சிலர் இங்கு சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது. இதனால், அங்கு தங்கியுள்ள மாணவர்கள் அச்சத்துடன் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
எனவே, அரசு தொழில் பயிற்சி மையத்தில் சுற்றுச்சுவர் கட்டுவதுடன், இரவு நேர காவலாளி நியமிக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.