திருச்சுழி அருகே சூறைக்காற்றுடன் பலத்த மழை: வாழை மரங்கள், வீடுகளின் மேற்கூரைகள் சேதம்

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம் ம.ரெட்டியபட்டி மற்றும் பரளச்சி சுற்றுவட்டார கிராமங்களில் புதன்கிழமை

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம் ம.ரெட்டியபட்டி மற்றும் பரளச்சி சுற்றுவட்டார கிராமங்களில் புதன்கிழமை மாலை சூறைக்காற்றுடன் பெய்த மழையில் சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள், நூற்றுக்கு மேற்பட்ட ஓட்டு வீடுகளின் மேற்கூரைகள் சேதமடைந்தன.
 திருச்சுழி வட்டத்துக்குள்பட்ட ம.ரெட்டியபட்டி மற்றும் பரளச்சி ஆகிய ஊராட்சி ஒன்றியப் பகுதிகளைச் சேர்ந்த தும்முசின்னம்பட்டி, செட்டிகுளம், பாறைக்குளம், உடையநாதபுரம், நல்லாங்குளம், நெடுங்குளம், கணக்கி, திருமலைபுரம் உள்ளிட்ட சுமார் 50-க்கு மேற்பட்ட  கிராமங்களில் வாழை பயிரிடப்பட்டிருந்தது. இந்நிலையில் புதன்கிழமை மாலை இக்கிராமங்களில் திடீரென சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இச்சூறைக்காற்றில் கிராமங்களிலிருந்த ஓட்டுவீடுகளின் மேற்கூரைகள் சேதமடைந்து ஓடுகள் தூக்கி வீசப்பட்டன. மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன. மேலும் சுமார் 7ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைமரங்கள் சாய்ந்து சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
 இதுகுறித்து இப்பகுதியிலுள்ள திருமலைபுரத்தைச் சேர்ந்த விவசாயி மணிமுத்து (42) கூறியதாவது: இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் பசுமைக்குடில் முறைமூலம் ரூ.6 லட்சம் முதலீட்டில் பயிரிட்டிருந்த கொத்தமல்லி, ரோஜா, வெள்ளரி உள்ளிட்ட பயிர்கள் மொத்தமாகச் சாய்ந்து சேதமடைந்து விட்டன. மேலும் பல்வேறு கிராமங்களில் சாதாரண, எளிய விவசாயிகள் பலரும் பயிரிட்டிருந்த  சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைமரங்களும் சேதமடைந்துள்ளன. 
    எனவே அரசு, விவசாயிகளுக்கு  உரிய இழப்பீடு வழங்கவேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com