சாத்தூரில் புதிதாக கட்டபட்டுள்ள வைப்பாற்று பாலத்தில் மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வைப்பாற்றின் குறுக்கே ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அமைக்கபட்ட பாலம் குறுகலாகவும், சேதமடைந்த நிலையிலும் இருந்தது. இதையடுத்து இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று புதிய பாலம் அமைக்க, கடந்த ஆட்சியில் ரூ.13.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றது. புதிய பாலம் அமைக்கும் பணிகள் முழுமையாக முடிந்தும் பல மாதங்களாக திறக்கப்படாமல் இருந்தது.
இதையடுத்து பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று புதிய பாலத்தை திறக்க நெடுஞ்சாலைத்துறையினரின் சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்யபட்டது. இதையடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி காணொலிக் காட்சி மூலம் பாலத்தை திறந்து வைத்தார். இதையடுத்து இந்த புதிய பாலத்தின் வழியாக வாகனப் போக்குவரத்து தொடங்கியது.
ஆனால் இந்த பாலத்தில் மின் விளக்குகள் அமைக்கபடவில்லை. இதனால் இரவு நேரங்களில் பாலம் இருளில் மூழ்கிக் கிடக்கிறது. அதனால் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே புதிய பாலத்தில் மின்விளக்குகள் அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.