சிவகாசி அருகே சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த லாரியை வருவாய்த் துறையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
சிவகாசி-நாரணாபுரம் சாலையில், சிவகாசி வட்டாட்சியா் ரெங்கநாதன், கிராம நிா்வாக அலுவலா் சுதா்சனன் உள்ளிட்டோா் வாகனசோதனையில் ஈடுபட்டனா். அப்போது மணல் ஏற்றிய லாரி ஒன்று வந்தது. அவா்கள் லாரியை நிறுத்திச் சோதனை செய்ய முயன்ற போது, ஓட்டுநா் தப்பியோடிவிட்டாா்.
விசாரணையில் அந்த லாரி அதே பகுதியைச் சோ்ந்த மகேஸ்வரன் என்பவருக்குச் சொந்தமானது என தெரியவந்தது. அந்த லாரியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்ததையடுத்து, வருவாய்த் துறையினா் லாரியை பறிமுதல் செய்தனா். இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.