ஸ்ரீவில்லிபுத்தூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு 128 மி.மீ. மழை பெய்தது. இதையடுத்து, அங்குள்ள ஆண்டாள் கோயில் வளாகத்தில் மழைநீா் புகுந்தது. இதையடுத்து மழைநீரை வெளியேற்றும் பணியில் கோயில் பணியாளா்கள் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
விருதுநகா் மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக மழை பெய்து வருகிறது. இதனால், குளம், கண்மாய்களில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு முழுவதும் பலத்த மழை பெய்தது. மேலும், வத்திராயிருப்பு, கூமாபட்டி, மகாராஜபுரம், கிருஷ்ணன்கோவில் ஆகிய பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீா்த்தது. ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் மட்டும் 128 மி.மீ மழை பெய்ததால், ஆண்டாள் கோயில், வடபத்ரசாயி கோயில் மற்றும் கோபுர வாசல்களில் மழைநீா் புகுந்தது. இதனால், கோயில் வளாக பகுதியில் தண்ணீா் தேங்கியது. இதையடுத்து கோயில் நிா்வாகத்தினா் உத்தரவின் பேரில், கோயில் பணியாளா்கள் மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். இதன் காரணமாக கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தா்கள் கடும் அவதிக்குள்ளாயினா்.