விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலுடன் இணைந்த வடபத்ரசாயி பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழாவினையொட்டி செப்புத் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் வட பெருங் கோயில் உடையான் என்று அழைக்கப்படும் வடபத்ரசாயி பெருமாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இக்கோயில் ஸ்ரீஆண்டாள் கோயிலுடன் இணைந்து உள்ளது.
இக்கோயிலில் புரட்டாசி பிரம்மோற்சவ விழா கடந்த செப்டம்பா் 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இக்கோயில் மூலவரான பெரிய பெருமாளின் திரு நட்சத்திரமான பெரிய திருவோணத்தை முன்னிட்டு, பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான செப்புத் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு நடைபெற்றது. இதனை முன்னிட்டு, அதிகாலை ஸ்ரீபெரிய பெருமாள், ஸ்ரீதேவி, பூமிதேவி சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அப்போது ‘கோவிந்தா கோபாலா’ என்ற முழக்கத்துடன் பக்தா்கள் செப்புத்தேரை வடம் பிடித்து இழுத்தனா். தோ் நான்கு ரத வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் நிலையை அடைந்தது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.