சிவகாசியில் புதன்கிழமை ஒலிபெருக்கி சப்தம் கேட்டு மிரண்டு ஓடிய பசு மாட்டை பிடிக்க முயன்ற பால் வியாபாரி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
சிவகாசி விவேகானந்தர் காலனியைச் சேர்ந்தவர் வைரமுத்து மகன் மகேந்திரன் (35). இவர் சொந்தமாக மாடு வளர்த்து பால் வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் முத்துராமலிங்கபுரம் காலனிப் பகுதியில் நடைபெற்ற ஒரு புதுமனை புகுவிழாவிற்கு ஒரு மாட்டினை கொண்டு சென்றுள்ளார். விழாவையொட்டி புதிய வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கியிலிருந்து வந்த சப்தத்தைக் கேட்டு மாடு மிரண்டு ஓட முயன்றுள்ளது.
அப்போது மகேந்திரன் மாட்டின் கயிற்றை இழுத்துப் பிடித்துள்ளார்.
இருப்பினும் மாடு வேகமாக ஓடியதால் அதனை பிடித்து நிறுத்த மகேந்திரன் முயற்சித்துள்ளார். அப்போது புதிய வீட்டின் முன்பு ஒரு கம்பத்தில் கட்டப்பட்டிருந்த குழல் விளக்கின் வயரில், மகேந்திரன் உடல் உரசியுள்ளது. இதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.