விருதுநகர் அருகே பாலவநத்தத்தில் புதன்கிழமை இருசக்கர வாகனத்தில் வந்த சகோதரர்கள் மீது இடி, மின்னல் தாக்கியதில் தம்பி உயிரிழந்தார்.அண்ணன் பலத்த காயமடைந்தார்.
விருதுநகர் அருகே உள்ள பாலவநத்தம் தெற்கு தெருவை சேர்ந்தவர்கள் கணேசன் மகன்கள் பிரகாஷ் (26) மற்றும் வினோத் பாண்டி (36). சகோதரர்களான இவர்கள் இருவரும் புதன்கிழமை கோட்டூர் பகுதியிலிருந்து இருசக்கர வாகனத்தில் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். குல்லூர்சந்தை விலக்கு சாலை அருகே வந்தபோது, அப்பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது.
அப்போது சகோதரர்கள் மீது மின்னல் தாக்கியது. இதில் பிரகாஷ் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். வினோத்பாண்டிக்கு தலை மற்றும் கை, கால்களில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து அருப்புக்கோட்டை தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.