சிவகாசி ஒன்றியம் ஆனையூர் ஊராட்சி நேருஜி நகரில் உள்ள மழைநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளர்.
ஆனையூர் ஊராட்சி நேருஜி நகரில் சுமார் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் மழை பெய்தால் மழைநீர் செல்வதற்கு கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் லட்சுமியாபுரம் வரை செல்கிறது. இந்த கால்வாயில் சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்தும், குப்பைகள் தேங்கியும் உள்ளன. இதனால் மழை காலங்களில் மழைநீர் சீராக செல்ல முடியாமல் வீடுகளுக்குள் புகுகின்றன. மேலும் இந்த கால்வாயில் கழிவுநீரும் செல்வதால் கொசு உற்பத்தியாகி சுகாதார கேடு ஏற்பட்டு வருகிறது.
எனவே கால்வாயை தூர்வாரி சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.