சிவகாசியில் அரசுப் பொருள்காட்சி வியாழக்கிழமை மாலை தொடங்கியது.
சிவகாசி- விருதுநகர் சாலையில் குறுக்குப் பாதைப் பேருந்து நிறுத்தம் அருகே இந்த பொருள்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த பொருள்காட்சியை தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி தலைமையில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடக்கி வைத்தார். இங்கு பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன், 27 அரசுத் துறை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். இந்த பொருள்காட்சி நாள்தோறும் மாலை 4 மணி முதல் 10 மணி வரை நடைபெறும்.
தொடக்க விழாவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அ. சிவஞானம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மு. ராஜராஜன், சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் தினகரன், சிவகாசி வட்டாட்சியர் ரெங்கநாதன், சிவகாசி நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) பார்த்தசாரதி, பொறியாளர் மகாலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.