விருதுநகரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கம் சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர் பிஎஸ்என்எல் பொது மேலாளர் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அந்த சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார்.
இதில் மத்திய அரசு, பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொண்டபடி கடந்த 2017 ஜனவரி 1 முதல் வழங்க வேண்டிய 15 சதவீத ஓய்வூதியத் தொகையை வழங்க வேண்டும். பிஎஸ்என்எல் நிறுவனத்தை பாதுகாக்க வேண்டும். பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் பெருமாள்சாமி, சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் வேலுச்சாமி, அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் குருசாமி, ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் சங்க மாவட்டத் தலைவர் சிவபெருமான் ஆகியோர் பேசினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.