சாத்தூர் அருகே பட்டாசுக் கடை மற்றும் கிட்டங்கியில் உரிய ஆவணமின்றி வைத்திருந்த ரூ. 4 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை போலீஸார் சனிக்கிழமை பறிமுதல் செய்து அதன் உரிமையாளரை கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் (40) என்பவருக்குச் சொந்தமான பட்டாசு கடை மற்றும் கிட்டங்கி கங்கர்செவல்பட்டி செல்லும் சாலையில் உள்ளது.
இந்த கடை மற்றும் கிட்டங்கியை விஜயகரிசல்குளம் பகுதியை சேர்ந்த நாராயணசாமி (54) ஒப்பந்த அடிப்படையில் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடை மற்றும் கிட்டங்கியில் அளவுக்கு அதிகமாகவும், உரிய ஆவணமின்றியும் பட்டாசுகளை பதுக்கி வைத்திருப்பதாக தகவலறிந்த வெம்பக்கோட்டை போலீஸார் வெள்ளிகிழமை இரவு அங்கு சோதனை நடத்தினர்.
பட்டாசு கடை மற்றும் கிட்டங்கியில் பட்டாசுகள் உரிய ஆவணமின்றி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சுமார் ரூ. 4 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
மேலும் அவற்றை வைத்திருந்த நாராயணசாமியையும் போலீஸார் கைது செய்தனர்.