சிவகாசி பேருந்து நிலையத்தில் உள்ள பட்டாசு இடைத் தரகர்களை வெளியேற்ற காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பட்டாசு கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் தமிழ்நாட்டின் பல பகுதிகளிருந்தும் பட்டாசு வாங்குவதற்கு , வெளியூர் பட்டாசு கடை வியாபாரிகள் மற்றும் சொந்த உபயோகத்திற்கு பட்டாசு வாங்குபவர்கள்சிவகாசிக்கு தினசரி வந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், சிவகாசியில் தங்கும் விடுதி, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில், பட்டாசு இடைத்தரகர்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
தங்கும் விடுதிகளில் வெளியூர் நபர்கள் தென்பட்டால், இடைதரகர்கள்அவர்களை நெருங்கி பட்டாசு வாங்க வேண்டுமா எனக் கேட்டு, கமிஷன் கொடுக்கும் கடை அல்லது தயாரிப்பாளர்களிடம் கூட்டிச்செல்வார்கள். வெளியூர் நபர்கள் பட்டாசு வாங்கினால் இடைத்தரகர்களுக்கு 5 முதல் 10 சதவீதம் வரை கமிஷன் கிடைக்கும் என கூறப்படுகிறது.
இதில் சில இடைத்தரகர்கள், அனுமதி இல்லாத பட்டாசு தயாரிப்பாளர்களிடம் கூட்டிசென்று விடுவார்கள். அவர்களிடம் பணத்தை செலுத்தும் வெளியூர் நபர்களுக்கு பட்டாசுகளை அனுப்பாமல் ஏமாற்றிவிடுவதாகவும் கூறப்படுகிறது.
எனவே வெளியூரிருந்து பட்டாசு வாங்க வருபவர்கள் இடைதரகர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற வாசகம் அடங்கிய விளம்பர பதாகைகளை காவல்துறையினர் பேருந்துநிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வைக்க வேண்டும். மேலும் இடைத்தரகர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பட்டாசுக் கடை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.