பொது இடங்களை சுத்தமாகவும், சுகா தாரமாகவும் வைத்து கொள்ள வேண்டும் என பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அ. சிவஞானம் வேண்டுகோள் விடுத்தார்.
ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தூய்மையே சேவை இயக்கத்தை சனிக்கிழமை தொடக்கி வைத்த அவர் கூறியதாவது:
சுத்தமான, சுகாதாரமான புதிய இந்தியாவை உருவாக்கும் வகையில் மத்திய அரசால் தூய்மையே சேவை இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், முழு சுகாதார தமிழகம் - முன்னோடி தமிழகம் என்ற நோக்கத்தில், தூய்மையே சேவை இயக்கத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. சுகாதாரம் என்பது ஒவ்வொருவரின் பொறுப்பு என்பதை உணர்த்தும் வகையில், தூய்மை பாரதம் இயக்கத்தை அனைத்து மக்களும் பங்கேற்கும் இயக்கமாக மாற்றுவதே இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம்.
திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற நிலையை அடையும் நோக்கில், கழிவறை இல்லாதவர்களின் வீடுகளில் கழிவறை கட்டுதல், அனைத்து பொது இடங்களிலும் சுத்தம் செய்யும் பணியில் உள்ளாட்சி அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன.
மேலும், பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், சுற்றுலா மற்றும் வழிபாட்டு தலங்களில் மக்களின் பங்கேற்புடன் தூய்மை செய்தல் போன்ற நடவடிக்கைகள் இந்த இயக்கத்தின் மூலம் மேற்கொள்ளப்படும்.
அதனடிப்படையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் மற்றும் அனைத்து அரசு அலுவலக வளாகங்களிலும் அனைத்துத்துறை தலைமை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஒத்துழைப்போடு தூய்மைப்படுத்தும் பணிகள் சனிக்கிழமை நடை பெற்றது.
பொதுமக்கள் தேவையற்ற பொருள்களை பொது இடங்களில் கொட்டுவதை தவிர்த்து, குப்பைத்தொட்டியில் போட வேண்டும். அதேபோல், பொதுமக்கள் பொது இடங்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்து கொண்டு மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் இது போன்ற விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து நடத்தப்படும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.உதயகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சுரேஷ், அரசு அலுவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.