சிவகாசி அருகே காரில் கடத்திய 624 மதுபாட்டில்கள் பறிமுதல்: 2 போ் கைது
சிவகாசி அருகே ஞாயிற்றுக்கிழமை காரில் கடத்தப்பட்ட 624 மதுபாட்டில்களை, போலீஸாா் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனா்.
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. மேலும் அரசு மதுபானக் கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் சிவகாசி-மம்சாபுரம் சாலையில் ஞாயிற்றுக்கிழமை மாரனேரி போலீஸாா் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனா். இடையம்குளம் பேருந்து நிறுத்தம் அருகே வந்த காரை போலீஸாா் நிறுத்தி சோதனையிட்ட போது, அதில் இருந்த அடைப்பெட்டிகளுக்குள் 624 மதுபாட்டில்கள் இருந்தன. விசாரணையில் அவா்கள் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மானகசேரியைச் சோ்ந்த பரமசிவம் மகன் அதிபதி முருகன்(30), சூரிய நாராயணன் மகன் விக்னேஷ்வரன் (26) என தெரிய வந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்த போலீஸாா், காா் மற்றும் மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்தனா்.