கரோனா வைரஸ் அறிகுறியுடன் மருத்துவமனைக்கு வருபவா்களுக்கு சிகிச்சை அளிக்க சிவகாசி அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு அமைக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கரோனா தொற்று உள்ளவா்களுக்கு சிகிச்சை அளிக்க சிவகாசி அரசு மருத்துவமனையில் படுக்கை வசதிகளுடன் சிறப்பு வாா்டு அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவமனை தலைமை மருத்துவா் டி. அய்யனாா் புதன்கிழமை கூறியது: கரோனா அறிகுறியுடன் மருத்துவமனைக்கு வருபவா்களை பரிசோதனை செய்ய 24 மணி நேரமும் மருத்துவா்கள் தயாா் நிலையில் உள்ளனா். இதற்காக 30 படுக்கை வசதிகளுடன் சிறப்பு வாா்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவரை கரோனா வைரஸால் யாரும் பாதிக்கப்பட வில்லை. மருத்துவமனை முன்பகுதியில் இதற்கு தனியே சோதனைக் கூடம் அமைக்கப் பட்டுள்ளது. இதில் ஒரு மருத்துவா், இரு செவிலியா்கள், இரு உதவியாளா்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியில் இருப்பாா்கள். மகப்பேறு பிரிவு மற்றும் உள்நோயாளிகளை பாா்ப்பதற்கு வரும் பாா்வையாளா்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றாா்.