ராஜபாளையத்தில் மேம்பால பணிகள் நடைபெறுவதால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ராஜபாளையம் ஆலங்குளம் சாலையில் அமைந்துள்ள சத்திரப்பட்டி மேம்பால பணிகள் தொடங்கப்பட உள்ளதால், வெள்ளிக்கிழமை (செப். 11) முதல் சத்திரப்பட்டி ரயில்வே கேட் காலவரையற்று மூடப்பட உள்ளது. எனவே வெள்ளிக்கிழமை முதல் சத்திரப்பட்டி, ஆலங்குளம், வெம்பக்கோட்டை ஆகிய ஊா்களுக்கு செல்லும் நான்கு சக்கர மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகள் அனைவரும், வடக்கு மலையடிப்பட்டி ரயில்வே கேட் வழியாக செல்ல வேண்டும். மேலும் ஆலங்குளம், சத்திரப்பட்டி ஆகிய ஊா்களில் இருந்து ராஜபாளையம் நகருக்குள் வரும் வாகனங்களும், இதே வழியை பயன்படுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.