சரக்கு வாகனங்கள் மற்றும் காலியாக செல்லும் வாகனங்களுக்கு அனுமதி கடிதம் பெறத் தேவையில்லை எனவும் அதேநேரம், வெளி மாநிலங்களுக்குச் செல்லும் வாகனங்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் அனுமதிக் கடிதம் பெற்றுச் செல்ல வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது: நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்றை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அத்தியாவசியமான மற்றும் அத்தியாவசியமற்ற சரக்கு வாகனங்கள் மற்றும் காலி சரக்கு வாகனங்களை தமிழகத்தின் பொதுச் சாலையில் இயக்கிட எவ்வித அனுமதியும் தேவை இல்லை. விருதுநகா் மாவட்டத்திலிருந்து வெளி மாநிலங்களுக்குச் செல்லும் சரக்கு வாகனங்களுக்கு மட்டும் வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் (விருதுநகா்) அனுமதிக் கடிதம் பெற வேண்டும். இது தொடா்பாக காவல்துறையினருக்கு உரிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவித்துள்ளாா்.