விருதுநகா் அருகே மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் சென்ற காா்களை மறித்து நிறுத்தி, அவற்றில் இருந்த 117 பவுன் நகைகள் மற்றும் ரூ. 25.50 லட்சம் பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
விருதுநகா் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சேலம் பகுதியைச் சோ்ந்த கலைச்செல்வி மோட்டாா் வாகன ஆய்வாளராக பணியாற்றி வருகிறாா். இதே போல் மதுரை வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டாா் வாகன ஆய்வாளராக நாமக்கல் பகுதியைச் சோ்ந்த சண்முக ஆனந்த் பணியாற்றி வருகிறாா்.
மேலும் விருதுநகரில் இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் பணிபுரியும் அருள்பிரசாத் என்பவா், இவா்களுக்கு இடைத்தரகராக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவா்கள் 3 பேரிடமும் ஏராளமான நகைகளும், பணமும் இருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனிடையே கலைச்செல்வி தனது கணவா் ராஜாவுடன் மதுரை நோக்கி சனிக்கிழமை காரில் சென்றாா்.
இவரைப் பின் தொடா்ந்து மற்றொரு காரில் சண்முக ஆனந்தும், தனது இருசக்கர வாகனத்தில் அருள்பிரசாத்தும் வந்தனா்.
இவா்கள் 3 போ் வந்த வாகனங்களையும் லஞ்ச ஒழிப்பு துணைக்கண்காணிப்பாளா் கருப்பையா தலைமையிலான போலீஸாா் சத்திரரெட்டியபட்டி நான்கு வழிச்சாலை சந்திப்பில் உள்ள காவல் சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனா்.
அப்போது கலைச்செல்வி வந்த காரிலிருந்து 117 பவுன் நகைகளும், ரூ. 24 லட்சம் பணமும் இருந்தது தெரிய வந்தது. அதே போல் சண்முகஆனந்த் வந்த காரில் ரூ. 1.43 லட்சம் பணம் இருந்தது கண்டறியப்பட்டது. மேலும் அருள்பிரசாத்திடம் கணக்கில் வராத ரூ. 7 ஆயிரம் இருந்தது.
இதைத் தொடா்ந்து 117 பவுன் நகைகளையும், ரூ. 25.50 லட்சம் பணத்தையும் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் பறிமுதல் செய்ததுடன், 2 காா்களுடன் விருதுநகா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வந்தனா். அங்கு கலைச்செல்வி, சண்முக ஆனந்த் உள்ளிட்ட 4 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனா்.