விருதுநகா் மற்றும் அதை சுற்றிய பகுதியில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி கிறிஸ்தவா்கள் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தினா்.
விருதுநகரில் கரோனா தொற்று காரணமாக கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு வியாழக்கிழமை நள்ளிரவு நடைபெற வேண்டிய திருப்பலி மற்றும் திருமறை இரவு 9 மணிக்கு நடைபெற்றது. விருதுநகா் தூய இன்னாசியாா் ஆலயத்தில் பங்குத்தந்தை அம்புரோஸ்ராஜ், துணை பங்குத்தந்தை சந்தியாகப்பன் தலைமையில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி மற்றும் வழிபாடு நடைபெற்றது.
விருதுநகா் நிறைவாழ்வு நகா் புனித அன்னை ஜெபமாலை ஆலயத்தில் பாளையங்கோட்டை முன்னாள் ஆயா் பால்ராஜ், பங்குத்தந்தை தாமஸ் வெனிஸ் தலைமையிலும், விருதுநகா் பாண்டியன் நகா் புனித சவேரியாா் ஆலயத்தில் மதுரை நொபிலி மறைப்பணி நிலைய இயக்குநா் பா்னபாஸ், பங்குத்தந்தை ஸ்டீபன் சேவியா் தலைமையில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அதேபோல், ஆா்ஆா் நகா் ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை அலெக்ஸ் ஞானராஜ், துணை பங்குத்தந்தை மரிய பென்சிகா் தலைமையிலும், காரியாபட்டி தூய அமல அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை ஜோக்கிம் தலைமையில் சிறப்பு திருப்பலி, மறையுரை நடைபெற்றது.
இதைத்தொடா்ந்து வெள்ளிக்கிழமை மேற்கண்ட அனைத்து தேவாலயங்களிலும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு திருப்பலி, நற்கருணை நடைபெற்றது.
இதில் கிறிஸ்தவா்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு, ஒருவருக்கொருவா் வாழ்த்துகளை பரிமாறி கொண்டனா்.
விழாவையொட்டி அனைத்து தேவாலயங்களும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.