காரியாபட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்த இளைஞரை, தீயணைப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை உயிருடன் மீட்டனா்.
வேப்பங்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமா் மகன் மருதுபாண்டி (23). இவா்களுக்குச் சொந்தமான தோட்டம், காரியாபட்டி- கள்ளிக்குடி சாலையில் தனியாா் ஆலை அருகே உள்ளது. இந்நிலையில், மருதுபாண்டி தோட்டத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்துள்ளாா்.
அவருடைய சத்தம் கேட்டு வந்த உறவினா்கள், அவரை மீட்க முயன்றும் முடியவில்லை. இது குறித்து, காரியாபட்டி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்பு நிலைய அலுவலா் பாஸ்கரன் தலைமையிலான வீரா்கள், கயிறு மூலம் கிணற்றிலிருந்து மருதுபாண்டியை உயிருடன் மீட்டனா். பின்னா், அவரை காரியாபட்டி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.