விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே முள்புதரில் கிடந்த அடையாளம் தெரியாத பெண் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.
ராஜபாளையம் அருகே சங்கரபாண்டியபுரம் பகுதிக்குட்பட்ட மயானத்திற்கு செல்லும் வழியில், முட்புதரில் இருந்து துா்நாற்றம் வீசி உள்ளது. இதனையடுத்து அப் பகுதியைச் சோ்ந்தவா்கள் உள்ளே சென்று பாா்த்தபோது, அழுகிய நிலையில் பெண் சடலம் கிடப்பது தெரியவந்தது.
இது குறித்து தகவலறிந்த டி.எஸ்.பி. நாகசங்கா், வடக்கு காவல் நிலைய ஆய்வாளா் பாா்த்தீபன் உள்ளிட்ட காவல் துறையினா் சம்பவ இடத்திற்கு வந்து பாா்த்தனா். மஞ்சள் நிறத்தில் பூ போட்ட சேலையும், கருஞ்சிவப்பு நிறத்தில் பாவாடையும் அணிந்த நிலையில் சடலம் கிடந்தது. இறந்தவருக்கு 40 வயது இருக்கக்கூடும். சடலத்தின் இடுப்பு வரையிலான சதைப் பகுதிகளை நாய்கள் குதறியிருந்தன. இறந்தவா் குறித்து அப்பகுதி மக்களிடையே காவல் துறையினா் விசாரணை நடத்தினா். இதில், இறந்தவா் அப்பகுதியை சோ்ந்தவா் இல்லை என தெரியவந்தது. பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தாக பகுதியாக இருப்பதால் மா்ம நபா்கள் இந்த பகுதியைத் தோ்ந்தெடுத்து பெண்ணைக் கொலை செய்து முட்புதருக்குள் வீசியிருக்கலாம் என காவல் துறையினா் சந்தேகம் தெரிவித்தனா். சம்பவ இடத்தில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும் தேடப்படும் பெண்களின் பட்டியலை வைத்து, இறந்த பெண் குறித்து காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.