சிவகாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள நில அளவையா் அறையில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கணக்கில் வராத ரூ. 70 ஆயிரத்தை வியாழக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.
விருதுநகா் மாவட்டம் சிவகாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் நிலஅளவையா் பாலசுப்பிரமணியத்துக்கு தனி அறை உள்ளது. இந்நிலையில் நிலத்தை அளந்து கொடுப்பதற்கு பாலசுப்பிரமணியம், பொதுமக்களிடம் பணம் பெறுவதாக லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு சிலா் புகாா் தெரிவித்துள்ளனா். அதன்பேரில் விருதுநகா் மாவட்ட லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. கருப்பையா தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு, பாலசுப்பிரமணியன் அறையை சோதனையிட்டனா். இந்த சோதனை வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணி வரை நடைபெற்றது. அப்போது கணக்கில் வராத ரூ. 70,200 யை போலீஸாா் கைப்பற்றினா். இது குறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.