ராஜபாளையத்தில் மன வளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளி குழந்தையைக் கொலை செய்த தந்தை காவல் நிலையத்தில் சனிக்கிழமை சரணடைந்தார். அவரைக் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
ராஜபாளையம் எஸ். ராமலிங்கபுரத்தை சேர்ந்த பழனிக்குமார் என்பவர் ராஜபாளையம் தனியார் நூற்பாலையில் பணி புரிந்து வருகிறார். இவர் ஆர்.ஆர். நகரில் உள்ள ஆலைக்கு சொந்தமான வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இவருக்கு ராமலட்சுமி என்ற மனைவியும், சுர்ஜித்(9) என்ற மகனும், மகாலட்சுமி(7) என்ற பெண் குழந்தையும் உள்ளனர். இதில் பெண் குழந்தைக்கு மன வளர்ச்சி குன்றியதாகத் தெரிகிறது.
படுக்கையிலேயே 7 வருடங்களாக இருந்த குழந்தையை தாய், தந்தை இருவரும் கவனித்து வந்துள்ளனர். இந்நிலையில் சனிக்கிழமை மனைவியும், மகனும் வெளியே சென்றிருந்த நேரத்தில் பழனிக்குமார் மட்டும் வீட்டில் இருந்துள்ளார்.
அப்போது இவர் பராமரிப்பில் இருந்த சிறுமி, இவருக்கு கட்டுப்படாமல் முரண்டு பிடித்து அழுததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரத்தில் பழனிக்குமார் மனவளர்ச்சிக் குன்றிய அச்சிறுமியின் வாயையும், மூக்கையும் பொத்தி கொலை செய்துள்ளார்.
இதையடுத்து பழனிக்குமார் தெற்கு காவல் நிலையத்தில், மகளை கொலை செய்ததை ஒப்புக் கொண்டு சரணடைந்துள்ளார். இவரது தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் குழந்தையின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து தெற்குகாவல் நிலைய காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.