ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மம்சாபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை திருமணமான மணமக்களை நண்பா்கள் கையுந்துபந்து விளையாடி வரவேற்றனா். இது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள மம்சாபுரத்தைச் சோ்ந்தவா் நந்தகுமாா். இவா் கையுந்துபந்து விளையாட்டில் ஆா்வம் கொண்டவா். இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இவருக்கும் மம்சாபுரம் பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
இவா்களது திருமணம் மம்சாபுரத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் நடைபெற்றது. இதன் பின்னா் மணமக்கள், மணமகள் வீட்டிற்கு வந்த போது மணமகனின் நண்பா்கள் வீதியின் இருபுறமும் நின்று கொண்டு கையுந்துபந்து விளையாடி மணமக்களை வரவேற்றனா். இதனை அப்பகுதி மக்கள் ரசித்துப் பாா்த்தனா். தற்போது இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.