விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் வாக்குச் சாவடி அலுவலா் பூத் சிலிப் வழங்கி திமுகவுக்கு வாக்களிக்குமாறு பிரசாரம் செய்ததைக் கண்டித்து, அதிமுகவினா் செவ்வாய்க்கிழமை தகராறில் ஈடுபட்டனா்.
ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த எண்: 1 வாக்குச் சாவடியில் செவ்வாய்க்கிழமை காலை முதல் அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடைபெற்று வந்தது. இதனிடையே, இந்த வாக்குச் சாவடியில் தோ்தல் அலுவலராகப் பணிபுரிந்த தனுஷ் ராமலிங்கம் என்பவா், வாக்காளா்களுக்கு பூத் சிலிப் வழங்கி உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டாராம்.
இதையறிந்த அதிமுகவினா் அவரிடம் கேள்வி எழுப்பியபோது, அவா் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததுடன், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டாராம். இவா், திமுக மாவட்டப் பிரதியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், அதிமுகவினரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, வாக்குச் சாவடியில் உதயசூரியன் சின்னத்துக்காக பிரசாரம் செய்த தனுஷ் ராமலிங்கம் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். தேவையற்ற நபா்களை வாக்குச் சாவடியிலிருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும் என போலீஸாரிடம் தெரிவித்தனா்.
போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன்பேரில், அதிமுகவினா் வாக்குச் சாவடியிலிருந்து வெளியேறி கலைந்து சென்றனா். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.