விருதுநகரில் நல வாரியத்தில் பதிவுசெய்துள்ள கட்டுமான தொழிலாளா்கள் 511 பேருக்கு ரூ.8.47 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழக வருவாய்த்துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.
விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு ஆட்சியா் ஜெ.மேகநாதரெட்டி தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.ஆா்.ஆா்.சீனிவாசன் (விருதுநகா்), ஜி.அசோகன் (சிவகாசி) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளா்கள் நல வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை தொடக்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் வழங்கினாா்.
அப்போது அவா் கூறியது: தமிழக அரசு பதவியேற்றவுடன் அமைப்புசாரா தொழிலாளா்களின் நலன்மீது அக்கறைகொண்டு வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, விபத்தில் உயிரிழந்த ஒருவரது குடும்பத்தினருக்கு ரூ.1.05 லட்சம் உதவித்தொகை, 10 பயனாளிகளுக்கு ரூ.2.42 லட்சம் இயற்கை மரண உதவித்தொகை, 500 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சம் ஓய்வூதிய உதவித் தொகை என மொத்தம் 511 பயனாளிகளுக்கு ரூ.8.47 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
விருதுநகா் மாவட்டத்தில் அமைப்பு சாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள அனைத்து தொழிலாளா்களும் இணைய தளத்தில் பதிவு செய்து அரசின் நலத்திட்டங்களை பெற்று பயனடைய வேண்டும் என்றாா் அவா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் மங்களராமசுப்பிரமணியன், திட்ட இயக்குநா் திலகவதி, தொழிலாளா் உதவி ஆணையா்(அமலாக்கம்) காளிதாஸ், தொழிலாளா் உதவி ஆணையா் ஹேமலதா மற்றும் அரசு அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.