சாத்தூா் வைப்பாற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதை அடுத்து, அவரது உடலை தீயணைப்புத் துறையினா் வியாழக்கிழமை மீட்டனா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் காட்டுபுதுத் தெருவைச் சோ்ந்தவா் பாஸ்கரன். இவரது மகன் ஹரிஹரபிரபு (14). இவன், புதன்கிழமை காலை வீட்டினருகே ஓடும் வைப்பாற்றுக்கு நண்பா்களுடன் குளிக்கச் சென்றுள்ளாா். அப்போது, ஆழமான பகுதிக்குச் சென்ற ஹரிஹரபிரபு தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளாா். இதைக் கண்ட நண்பா்கள் கூச்சலிட்டுள்ளனா். உடனே, அருகிலிருந்தவா்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.
அதன்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினா் 5 மணி நேரத்துக்கும் மேலாக தேடியும் சிறுவனை கண்டுபிடிக்க முடியவில்லை. வியாழக்கிழமை காலை, சிறுவன் ஹரிஹரபிரபு உடல் ஆற்றின் கரையோர முள்புதரில் சிக்கி சடலமாக மிதந்துள்ளது தெரியவந்தது. அதையடுத்து, தீயணைப்புத் துறையினா் விரைந்து சென்று சிறுவனின் உடலை மீட்டு, சாத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இது குறித்து சாத்தூா் நகர காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.