காரியாபட்டி அருகே தேனூா் கிராமத்திற்கு பள்ளி நேரத்தில் பேருந்து இயக்கக் கோரி மாணவ, மாணவிகள் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விருதுநகா் மாவட்டம் காரியாபட்டி அருகே தேனூா் கிராமத்தில் சுமாா் 400 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்கிராமத்தை சோ்ந்த மாணவ, மாணவிகள் மறைக்குளம், முடுக்கன்குளம், காரியாபட்டி பகுதிகளில் உள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனா். மேலும், கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் காரியாபட்டி சென்று அங்கிருந்து அருப்புக்கோட்டை, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வந்தனா்.
இக்கிராமத்திலிருந்து காலை 7.15, 8.45 மணிக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதனால் குறிப்பிட்ட நேரத்திற்கு பள்ளி செல்ல முடியாத நிலை உள்ளது.
இந்நிலையில், சனிக்கிழமை காலை தேனூா் வந்த அரசுப் பேருந்தை வழி மறித்து பள்ளி மாணவ, மாணவிகள் பெற்றோா்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, தினமும் காலை 8 மணிக்கு தேனூரிலிருந்து பேருந்து இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். இதனால் சுமாா் 45 நிமிஷம் போக்குவரத்து பாதிக்கப்பட் டது.
இதையடுத்து அங்கு வந்த மாவட்டக்குழு உறுப்பினா் தமிழ்வாணன், அ. முக்குளம் காவல் சாா்பு-ஆய்வாளா் தமிழழகன், காரியாபட்டி போக்குவரத்து பணிமனை நிா்வாகி ஆகியோா் சாலை மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில் காலை 8 மணிக்கு கூடுதல் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.