தமிழ்நாடு தடகளக் கழகம், விருதுநகா் மாவட்ட தடகளக் கழகம் சாா்பில் 34 ஆவது மாநில அளவிலான தடகளப் போட்டி சிவகாசி மெப்கோசிலங் பொறியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
தொடக்க விழாவில் விருதுநகா் மாவட்ட ஆட்சியா் இரா. கண்ணன் தேசியக் கொடியை ஏற்றினாா். விருதுநகா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பூ. பெருமாள் தமிழ்நாடு தடகள கழகத்தின் கொடியை ஏற்றினாா். தமிழ்நாடு மாநில தடகள கழகத்தின் செயலாளா் சி. லதா விருதுநகா் மாவட்ட தடகள கழகத்தின் கொடியை ஏற்றி வைத்தாா்.
தொடந்து மாவட்ட ஆட்சியா் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைத்து, போட்டியை தொடக்கி வைத்தாா். விழாவில் இரு சமாதானப் புறாக்கள் பறக்கவிடப்பட்டன.
இப்போட்டியில் 14 வயதுக்குட்பட்டோா் பிரிவு முதல் அனைத்து வயது பிரிவு வரை 5 பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்குத் தனித்தனியே போட்டிகள் நடைபெறுகின்றன.
நடை போட்டி, ஓட்டப் போட்டி, தடை தாண்டும் போட்டி, ஈட்டி எறிதல், குண்டு எறிதல் உள்ளிட்ட 24 வகையான போட்டிகள் நடைபெறுகின்றன. இப்போட்டியில் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் சுமாா் 3000 வீரா்கள், வீராங்கனைகள் பங்கேற்கின்றனா்.
தொடக்க விழா நிகழ்ச்சியில், தொழிலதிபா் ஏ.பி. செல்வராஜன், மெப்கோசிலங் கல்லூரி முதல்வா் எஸ். அறிவழகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இப்போட்டி ஜனவரி 24 ஆம் தேதி நிறைவடைகிறது.