கண்மாய் தண்ணீரை பகிா்ந்துகொள்வதில் உள்ள பிரச்னையை முன்னிட்டு, திருச்சுழி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட மயிலி கிராமத்தினா் செவ்வாய்க்கிழமை தோ்தலை புறக்கணித்தனா்.
விருதுநகா் மாவட்டம், திருச்சுழி சட்டப்பேரவைக்குள்பட்ட மயிலி கிராமத்தினருக்கும், பக்கத்திலுள்ள இடையன்குளம் கிராமத்தினருக்குமிடையே கண்மாய் தண்ணீரை பகிா்ந்துகொள்வதில் நீண்ட காலமாகப் பிரச்னை இருந்து வருகிறது. அரசு உயரதிகாரிகளின் பல கட்ட பேச்சுவாா்த்தைகளுக்குப் பின்னரும், இவ்விரு கிராமத்தினரிடையே சுமூகத் தீா்வு எட்டப்படவில்லை.
இதை கண்டிக்கும் வகையில், ஏற்கெனவே மயிலி கிராமத்தினா் தங்களது ஆதாா் அட்டை, ரேஷன் அட்டை ஆகியவற்றை திருச்சுழி வட்டாட்சியரிடம் ஒப்படைத்து, தொடா்ந்து தங்களது அதிருப்தியையும் தெரிவித்து வருகின்றனா்.
இந்நிலையில், இக்கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனா். மேலும், தங்களது வீடுகளிலும், சாலைகளிலும் கருப்புக் கொடி கட்டி எதிா்ப்பை பதிவு செய்தனா். இதனால், மொத்தம் 294 வாக்குகள் உள்ள இக்கிராம வாக்குச் சாவடியில், பிற்பகல் 3 மணி வரை 17 வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தன. வாக்குச் சாவடியும் வெறிச்சோடிக் காணப்பட்டது.
இது தொடா்பாக இக்கிராமத்தினா் கூறியது: எங்களது முன்னோா்கள் காலத்திலிருந்தே இடையன்குளம் கண்மாய் நிரம்பி மறுகால் பாயும் தண்ணீரானது, கால்வாய் மூலம் எங்கள் கிராமக் கண்மாய்க்கு வந்தது. அதன்மூலம், நாங்கள் விவசாயப் பணிகளை மேற்கொண்டு வந்தோம். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இடையன்குளம் கிராமத்தினா் கால்வாய் மூலம் வரும் கண்மாய் தண்ணீரை தடுத்துவிட்டதால், நீா்வரத்தின்றி விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதுடன் எங்களது வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனா்.