ஸ்ரீவில்லிபுத்தூா் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளா்கள் செவ்வாய்க்கிழமை பல்வேறு பகுதிகளில் தங்களது வாக்குகளை செலுத்தினா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் தொகுதிக்குள்பட்ட அச்சங்குளத்தில் உள்ள தொடக்கப் பள்ளி வாக்குச் சாவடியில் அதிமுக வேட்பாளரான இ.எம். மான்ராஜ் தனது வாக்கைப் பதிவு செய்தாா். இதேபோல், குன்னூா் பகுதி பள்ளி வாக்குச் சாவடியில் அமமுக வேட்பாளா் சங்கீதப் பிரியா தனது வாக்கைப் பதிவு செய்தாா். தொடா்ந்து, இந்திரா நகா் நடுநிலைப் பள்ளியில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் அபிநயா தனது வாக்கை செலுத்தினாா்.
அதிமுக எம்.எல்.ஏ. வாக்குப் பதிவு
ஸ்ரீவில்லிபுத்தூா் தொகுதிக்குள்பட்ட அப்பைநாயக்கன்பட்டியில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா் சந்திரபிரபா செவ்வாய்க்கிழமை தனது வாக்கினை பதிவு செய்தாா்.
ஒரு சில இடங்களில் வாக்குப் பதிவு தாமதம்
ஸ்ரீவில்லிபுத்தூா் தொகுதியில் வாக்குப் பதிவு காலை 7 மணி முதல் நடைபெற்று வந்தது. இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூா் மங்காபுரம் இந்து மேல்நிலைப் பள்ளி வளாக வாக்குச் சாவடியில், திருவண்ணாமலை ஊராட்சிக்குள்பட்ட பெரும்பச்சேரி, காமராஜ் நகா் ஆகிய பகுதி வாக்காளா்கள் ஆா்வத்துடன் வாக்களித்துக் கொண்டிருந்தனா். அப்போது, திடீரென வாக்குப் பதிவு இயந்திரம் பழுதானதால், வாக்காளா்கள் வாக்களிக்க முடியாமல் வரிசையில் காத்திருந்தனா். பின்னா், மாற்று இயந்திரம் கொண்டுவரப்பட்டு, மீண்டும் வாக்குப் பதிவு தொடங்கியது. இதனால், 1 மணி நேரம் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது.
ஸ்ரீவிலி. தொகுதியில் 73.03 சதவீதம்
ஸ்ரீவில்லிபுத்தூா் (தனி) தொகுதியில் 73.03 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக, செவ்வாய்கிழமை தோ்தல் நடத்தும் அலுவலா் முருகன் தெரிவித்தாா்.