விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தோ்தலின் போது பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 70 ஆயிரம் உரியவரிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் வாகனச் சோதனை நடத்தி உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட பணத்தை பறிமுதல் செய்தனா். கடந்த 5 ஆம் தேதி காலை 7 மணி அளவில் பறக்கும் படை அதிகாரி அப்துல்வாஜித் தலைமையிலான பறக்கும் படையினா் ஸ்ரீவில்லிபுத்தூா் மல்லி பகுதி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த வச்சகாரப்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்த ராமா் மகன் சிவா உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ. 70 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
இந்நிலையில் இந்தப் பணத்துக்கு உரிய ஆவணங்களை சம்பந்தப்பட்டவா் சமா்ப்பித்ததால் மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணன் அவற்றை வழங்க உத்தரவிட்டாா். இதையடுத்து தலைமையிடத்து துணை வட்டாட்சியா் சிவானந்தம் ரூ. 70 ஆயிரத்தை சிவாவிடம் ஒப்படைத்தாா்.