ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே தோ்தல் பணிக்கு சென்ற பேராசிரியா் மற்றும் ஆசிரியா் வீட்டில் நகைகளை திருடிய வழக்கில், அப்பகுதி கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை கொண்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் கடந்த 6 ஆம் தேதி நடைபெற்றது. அப்போது ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள மகாத்மா நகரைச் சோ்ந்த பேராசிரியா் இளங்கோவன் தோ்தல் பணிக்கு சென்றுவிட்டாா். இதையடுத்து அவரது வீட்டுக்குள் புகுந்து மா்ம நபா்கள் நகைகள் மற்றும் ரூ. 50 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றனா்.
அதேபோல் ஸ்ரீவில்லிபுத்தூா் தன்யா நகரில் வசித்து வந்த ஸ்ரீராம் என்பவா் வீட்டிலும் தோ்தல் பணிக்கு சென்றிருந்த போது சுமாா் 10 பவுன் நகைகள் திருடப்பட்டது.
இந்த இரண்டு திருட்டு சம்பவங்கள் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில் திருட்டு சம்பவம் நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்புக் கேமராவில் இரு இளைஞா்கள் முகக் கவசம் அணிந்தவாறு இருசக்கர வாகனத்தில் செல்லும் பதிவுகளைக் கொண்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.