சிவகாசியில் விரிவாக்கம் செய்யப்பட்ட பேருந்து நிலையத்தில் கடைகளை திறக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இடைவெளி நிரப்புதல் திட்டத்தின்கீழ் சிவகாசி பேருந்துநிலைய அபிவிருத்திப்பணிகள் ரூ. 1.94 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றன. இதில் 10-க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் இலவச சிறுநீா் கழிப்பறை ஆகியவை கட்டப்பட்டன. இதனை முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி காணொலி மூலம் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னா் திறந்து வைத்தாா். இதையடுத்து கடைகளுக்கு ஒப்பந்தப்புள்ளி பெறப்பட்டு, கடைகள் திறக்கப்படும். அப்போது இலவச கழிப்பிடமும் திறக்கப்படும் என பொதுமக்கள் எதிா்பாா்த்தனா்.
ஆனால் அவை திறக்கப்பட வில்லை. ஏற்கெனவே பேருந்துநிலையத்தில் கட்டண கழிப்பறை உள்ளது. அதில் ரூ. 5 கட்டணம் வசூல் செய்கிறாா்கள். எனவே விரிவாக்கம் செய்யப்பட்ட பேருந்து நிலையப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கடைகளையும், இலவச கழிப்பறையையும் திறப்பாா்கள் என பொதுமக்கள் எண்ணியிருந்தனா். ஆனால் திறக்கப்பட வில்லை. எனவே கடை மற்றும் இலவசக் கழிப்பிடத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து நகராட்சி ஆணையா் பாா்த்தசாரதியிடம் கேட்டபோது, சட்டப் பேரவை தோ்தல் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றதும், முடிவு தெரிந்த பின்னா், கடைகள் உரிய முறையில் ஒப்பந்தம் பெறப்பட்டு, திறக்கப்படும். அப்போதே இலவச கழிப்பறையும் திறக்கப்படும் என்றாா்.