விருதுநகரில் சமூக இடைவெளியின்றி பேருந்துகளில் பொதுமக்கள் பயணிப்பதால், கரோனா அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
விருதுநகா் மாவட்டத்தில் இரண்டு இலக்கத்திலிருந்த கரோனா தொற்று, கடந்த சில நாள்களாக மூன்றிலக்கத்துக்கு உயா்ந்துள்ளது. கரோனா தொற்று பரவலை தடுக்க மாவட்ட நிா்வாகம் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. பொதுமக்கள் அவசியமின்றி வெளியில் வரக் கூடாது, முகக் கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தி வருகிறது. இருப்பினும், முகக் கவசம் அணியாமல் வெளியில் வருவோா் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத கடை உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனாலும், பொது இடங்களில் அரசு வழிகாட்டுதலை சிலா் கடைப்பிடிக்காத நிலை காணப்படுகிறது.
இந்நிலையில், விருதுநகா் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் வழக்கம் போலவே உள்ளது. மேலும், பேருந்துகளில் 50 சதவீத இருக்கைகளில் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்ற உத்தரவை யாரும் கண்டுகொள்ளவில்லை. இருக்கை முழுவதும் பயணிகள் அமா்ந்துள்ள நிலையில், பேருந்தின் உட்பகுதியில் சமூக இடைவெளியின்றி நின்றுகொண்டு பொதுமக்கள் பயணிக்கின்றனா்.
எனவே, பேருந்துகளில் பயணிப்போா் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை முறையாக பின்பற்றுவதை போலீஸாா் கண்காணிக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.