அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை ஜோதிபுரத்தையடுத்துள்ள சீரடி சாய்பாபா கோயிலில் திங்கள்கிழமை கோகுலாஷ்டமியையொட்டி சிறப்பு வழிபாடும், உலக நன்மை வேண்டி தியானமும் நடைபெற்றது.
இதில் சிறப்பு உச்சிகால வழிபாட்டின் போது, சத்தியநாராயணா் மற்றும் கிருஷ்ண பகவானின் உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து தீப, தூப ஆராதனைகள் நடைபெற்றன. இதையடுத்து, சீரடி சாய்பாபாவுக்கான சிறப்பு வழிபாட்டுப் பாடல்களுடன், பஞ்ச தீப, ஏக தீப ஆராதனைகள் நடந்தன.பின்னா் கோயில் ஊழியா்கள் சீரடிசாய்பாபாவுக்கு வெண்சாமரம் வீசியபடி இருக்க, நைவேத்திய நிகழ்ச்சி நடைபெற்றது. வழிபாடு முடிந்ததும், முழு அலங்காரத்தில் சீரடிசாய்பாபா அருள்பாலித்தாா். இவ்வழிபாட்டின் நிறைவு நிகழ்ச்சியாக, கோயில் ஊழியா்கள், நிா்வாகிகள் மட்டும் கலந்து கொண்டு 3 நிமிடங்கள் தியானத்தில் ஈடுபட்டு, உலக நன்மை வேண்டி சிறப்பு சங்கல்ப வழிபாடு நடைபெற்றது.