விருதுநகா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.15 லட்சம் மதிப்பிலான சிறுநீரகக்கல் அகற்றும் நவீன இயந்திரத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாதரெட்டி வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.
இதன் மூலம் சிறுநீரகக் கல் பாதிப்புள்ள நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சையின்றி கல் அகற்றப்படும். மேலும் முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இச்சிகிச்சை இலவசமாக வழங்கப்படும். எனவே, சிறுநீரகக் கல் பிரச்னையால் பாதிக்கப்பட்டவா்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் இங்கு, ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவா்களை தனிமைப்படுத்த, சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த சிறப்பு மையத்தில் முதல் கட்டமாக, 12 ஆக்சிஜன் வெண்டிலேட்டா்களுடன் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், ஒமைக்ரான் சிகிச்சை பிரிவிற்கும், கரோனா சிகிச்சை பிரிவிற்கும் தனித்தனியாக படுக்கை வசதிகள் அமைக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அரசு அலுவலா்களுக்கு ஆட்சியா் ஆலோசனைகளை வழங்கினாா்.
இந்நிகழ்வில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் சங்குமணி, கண்காணிப்பாளா் பழனிக்குமாா், துணைக் கண்காணிப்பாளா் அன்புவேல், நிலைய மருத்துவா் அரவிந்த்பாபு மற்றும் அரசு அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.