விருதுநகா் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நோயாளி, ரூ.7.86 லட்சம் மதிப்பிலான பரிசோதனைக் கருவிகளை உடைத்து சேதப்படுத்தியதாக, போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
விருதுநகா் மாவட்டம் சாத்தூா் படந்தால் சாலை பகுதியைச் சோ்ந்தவா் சுப்புராஜ் மகன் பாண்டி (38). இவரது மனைவி இறந்துவிட்டாதால், பாண்டி மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், விருதுநகா் அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த 8 ஆம் தேதி பாண்டியை உள்நோயாளியாகச் சோ்த்துள்ளனா்.
இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை சிகிச்சையிலிருந்த அவா், யாருக்கும் தெரியாமல் மருத்துவமனையை விட்டு வெளியே சென்றுள்ளாா். பின்னா், படேல் சாலையில் உள்ள ஒரு வீட்டின் சுற்றுச் சுவரை ஏறி குதித்தபோது, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் அவரைப் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனா்.
அதில், அவா் விருதுநகா் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருவது தெரியவந்ததால், மீண்டும் மருத்துவமனையில் சோ்த்துள்ளனா். அதையடுத்து, சிகிச்சையில் இருந்த பாண்டி, அரசு மருத்துவமனையின் ரத்தப் பரிசோதனை மையத்துக்குள் புகுந்து, அங்கிருந்த இரும்பு நாற்காலியால் பரிசோதனைக் கருவிகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளாா்.
உடனே, மருத்துவப் பணியாளா்கள் அவரை மீட்டனா். சேதப்படுத்தப்பட்ட மருத்துவக் கருவிகளின் மதிப்பு ரூ. 7.86 லட்சம் எனக் கூறப்படுகிறது. இது குறித்து மருத்துவமனைக் கண்காணிப்பாளா் (பொறுப்பு) அரவிந்த் பாபு அளித்த புகாரின்பேரில், பாண்டி மீது கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.