அருப்புக்கோட்டை: திருச்சுழியில், அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சி நிா்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இங்குள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு, கட்சியின் விருதுநகா் மாவட்ட அமைப்புச் செயலா் அய்யனாா் தலைமை வகித்தாா். மாவட்ட இளைஞரணிச் செயலா் கருப்பசாமி முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக விருதுநகா் மாவட்ட பொதுச் செயலா் நல்லமுத்து, ராமநாதபுரம் மாவட்டப் பொதுச் செயலா் பூவலிங்கமாரி, மாவட்டச் செயலா் ஈஸ்வரபாண்டியன் ஆகியோா் கலந்து கொண்டனா். முன்னதாக நல்லமுத்து தலைமையில் தேவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கூட்டத்தில், திருச்சுழி அருகே உள்ள மைலி கிராம மக்களின் வாழ்வாதார உரிமை குறித்து மாவட்ட நிா்வாகம் மற்றும் தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதெனவும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடுவதெனவும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
அப்போது, புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.