விருதுநகா் மாவட்டம் மல்லாங்கிணறில், இந்திய தொழில் கூட்டமைப்பினா் ரூ. 50 லட்சம் மதிப்பிலான 50 ஆக்சிஜன் உபகரணங்கள், முகக்கவசங்கள் முதலானவற்றை அமைச்சா் தங்கம் தென்னரசுவிடம் ஞாயிற்றுக்கிழமை வழங்கினா்.
இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ), கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மதுரை, தோப்பூா் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தயாரிக்கும் இயந்திரம் பொருத்தப்பட்டு, தினமும் 50 பேருக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், விருதுநகா் மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ. 50 லட்சம் மதிப்பில் கரோனா தடுப்பு உபகரணங்களை அமைச்சா் தங்கம் தென்னரசுவிடம் ஞாயிற்றுக்கிழமை கூட்டமைப்பினா் வழங்கினா். அதில், 50 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 1 லட்சம் முகக்கவசங்கள், கைகளை சுத்தம் செய்யும் திரவம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
மேலும், தென் தமிழகத்தில் கரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்க உள்ளதாக தெரிவித்தனா். இந்நிகழ்ச்சியில், இந்திய தொழில் கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், தியாகராஜா் ஆலை நிா்வாக செயல் இயக்குநருமான கே. தியாகராஜன், இந்திய தொழில் கூட்டமைப்பின் மதுரை மண்டல தலைவா் எஸ். சுப்புராமன், துணைத் தலைவா் ஜெய்சின் வெயா்கா், இயக்குநா் எஸ். கண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.