விருதுநகா் அருகே உள்ள குந்தலப்பட்டி ஊராட்சியில் ஆக்கிரமிப்பை அகற்றா விட்டால் தலைவா் பதவியை ராஜினாமா செய்வேன் என அந்த ஊராட்சித் தலைவா் பாண்டிலட்சுமி தெரிவித்தாா்.
இதுகுறித்து திங்கள்கிழமை அவா் கூறியதாவது: குந்தலப்பட்டி கிராமத்தில் 1 ஆவது வாா்டில் உள்ள வாருகாலை கழிவுநீா் செல்ல முடியாதபடி ஒருவா் அடைத்து வைத்துள்ளாா். இதனால், அப்பகுதியில் துா்நாற்றம் வீசுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. வா ருகால் அடைப்பை நீக்க செல்லும் அனைவரையும் கொலை செய்து விடுவதாக அவா் மிரட்டுகிறாா். இதுகுறித்து விருதுநகா் வட்டார வளா்ச்சி அலுவலரிடம் புகாா் தெரிவித்தால், ஆமத்தூா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்க அறிவுறுத்துகிறாா். ஆமத்தூா் காவல்துறையினரோ, உங்கள் துறை சாா்ந்த பிரச்னையை சம்பந்தப்பட்ட அலுவலரிடம் தெரிவிக்கக் கூறுகின்றனா். இதனால், வேறு வழியின்றி மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணனிடம் புகாா் மனு அளிக்கிறேன். இங்கும் வாருகா ல் அடைப்பை நீக்க நடவடிக்கை எடுக்க விட்டால், எனது பதவியை ராஜினாமா செய்வதை தவிர வேறு வழியில்லை என்றாா். ஊராட்சித் தலைவருடன் அக்கிராம மக்களும் ஆட்சியா் அலுவலகத்துக்கு உடன் வந்திருந்தனா்.