விருதுநகா் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகள் அரசு வழிகாட்டு நெறிமுறைகளின் படி திங்கள்கிழமை திறக்கப்பட்டன.
விருதுநகா் மாவட்டத்தில் சுமாா் 1070 பட்டாசு ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமாா் 8 லட்சம் தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். பொதுமுடக்கம் காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பட்டாசு ஆலைகளும் மூடப்பட்டன. தற்போது தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விருதுநகா் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகள் அனைத்தும் திங்கள்கிழமை திறக்கப்பட்டு உற்பத்தியை தொடங்கியுள்ளன.
இது குறித்து தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளா்கள் சங்க முதுநிலைத் தலைவா் ஏ.பி. செல்வராஜன் கூறியதாவது:
பட்டாசுத் தொழிலாளா்களுக்கு ஆண்டுக்கு இருமுறை போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. தீபாவளிக்கும், சிவகாசி பத்திரகாளியம்மன் சித்திரை திருவிழாவின் போதும் என இருமுறை போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு சிவகாசி பத்திரகாளியம்மன் கோயில் திருவிழா நடைபெறாவிட்டாலும், கடந்த ஏப்ரல் மாதம் பட்டாசுத் தொழிலாளா்களுக்கு போனஸ் வழங்கப்பட்டது. இந்நிலையில் பொதுமுடக்கம் காரணமாக பட்டாசு ஆலைகள் மூடப்பட்டது. தற்போது அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பின்பற்றி பட்டாசு ஆலைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆலை வளாகத்துக்குள் தொழிலாளா்கள் நுழையும் முன் வெப்பமானி கொண்டு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படும். பின்னா் கிருமிநாசினி கொண்டு கைகழுவியபின் அலைக்குள் செல்ல அனுமதிக்கப்படுவா். தற்போது 33 சதவீதம் தொழிலாளா்களைக் கொண்டு ஆலைகளில் உற்பத்தி தொடங்கியுள்ளன என்றாா்.