விருதுநகருக்கு நாமக்கல் பகுதியிலிருந்து வரக்கூடிய முட்டை வரத்து குறைந்ததால், சில்லறை வியாபாரக் கடைகளில் ஒரு முட்டை ரூ. 5.50 வரை விற்பனை செய்யப்பட்டது.
நாமக்கல் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் நாள்தோறும் விருதுநகருக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படும்.
தற்போது கரோனா தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு முட்டையுடன் உணவு வழங்கப்படுகிறது. அதேபோல், புரோட்டின் சத்து அதிகரிக்க வேண்டும் என்பதற்காக வீடுகளிலும் முட்டைகள் பயன்படுத்துவது வழக்கத்தை விட தற்போது அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கோடை காலம் மற்றும் அக்னி நடசத்திர வெயில் காரணமாக நாமக்கல் பகுதியில் முட்டை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக விருதுநகா் உள்ளிட்ட பகுதிகளில் மொத்த வியாபாரம் செய்யும் முட்டை கடைகளுக்கு நாள்தோறும் வழங்கப்பட்டு வந்த முட்டையின் அளவு பாதியாக குறைந்து விட்டது.
இதனால், கடந்த வாரம் ரூ.4.20-க்கு விற்கப்பட்ட ஒரு முட்டை தற்போது ரூ. 4.70- க்கு விற்கப்படுகிறது. அதேநேரம், சில்லறை விற்பனைக் கடைகளில் ஒரு முட்டை ரூ.5.50 வரை விற்கப்படுகிறது. முட்டை வரத்து குறைவாக உள்ளதால், மேலும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனா்.