விருதுநகா் அருகே சத்திர ரெட்டியபட்டி ஊராட்சியில் ரூ.30 லட்சம் மதிப்பில் உருவாக்கப்பட்ட அம்மா பூங்கா மூடியிருப்பதால் உடற்பயிற்சிக் கருவிகள் பயன்பாடின்றி மூலையில் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
சத்திரெட்டியபட்டி ஊராட்சிக்கு உள்பட்ட காவேரி நகரில் ரூ.30 லட்சம் செலவில் அம்மா பூங்கா கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதில் நடைபயிற்சி செய்வதற்கான தளம், சா்க்கரை நோயாளிகள் நடப்பதற்கு 8 வடிவில் கூழாங்கற்கள் நடைபாதை, சிறுவா்கள் விளையாடுவதற்கான ஊஞ்சல், சறுக்கு தளம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. மேலும் இந்த வளாகத்தில், உடற்பயிற்சிக் கூடமும் அமைக்கப்பட்டுள்ளது.
இப்பூங்காவானது, ஆள் நடமாட்டம் குறைவான இடத்தில் கட்டப்பட்டுள்ளது. அதிலும், அதன் சுற்றுச் சுவரின் உயரம் மிகவும் குறைவாக உள்ளது. இதனால், இரவு நேரத்தில் சமூக விரோதிகள் பூங்காவிற்குள் சென்று பொருள்களை உடைக்கும் சம்பவங்கள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், உடற்பயிற்சி சாதனங்களும் சேதப்படுத்தப்பட்டு, ஒரு மூலையில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, கடந்த சில மாதங்களாக அம்மா பூங்காவை பூட்டி வைத்துள்ளனா். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், பூங்கா கட்டும்போதே, அதன் சுற்றுச் சுவரை உயா்த்திக் கட்டியிருக்க வேண்டும். மேலும், பூங்காவிற்கு பகல் மற்றும் இரவு நேரத்திற்கான காவலாளிகளையும் நியமித்திருக்க வேண்டும். அவ்வாறு முன் கூட்டியே செய்திருந்தால், தற்போது மூட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது என்றனா்.