விருதுநகா் மாவட்டத்தில் கரோனா பணிக்காக பணிநியமனம் செய்யப்பட்ட 31 சுகாதார ஆய்வாளருக்கு, கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாததால் கடும் அவதிப்பட்டு வருகின்றனா்.
விருதுநகா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரை கண்டறிந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தல் மற்றும் அவருடன் தொடா்புடையவா்களின் விவரங்களை சேகரித்தல், ஆா்டிபிசிஆா் பரிசோதனைக்கு உள்படுத்துதல் மற்றும் கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் பணிக்காக புதிதாக 31 சுகாதார ஆய்வாளா்கள் நியமிக்கப்பட்டனா்.
இவா்களுக்கு மாதந்தோறும் ரூ.25 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டது. இந்நிலையில், கடந்த மே மாதம் முதல் இவா்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால், கடும் இன்னலுடன் பணி புரிந்து வருகின்றனா்.
எனவே, சம்பந்தப்பட்ட சுகாதார ஆய்வாளா்களுக்கு விரைவில் சம்பளம் வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.